தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 மே, 2018

மலேசியாவை அலங்கரிக்கும் ராஜகாளியம்மன் கோவில்: ஒளிவெள்ளமாய் காட்சி தரும் அதிசயம்


கடல் கடந்து சென்று பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், அவர்கள் செல்லும் இடங்களில் தமிழகத்தின் கலாசார முத்திரையை அழுத்தமாக பதிக்க தவறுவதில்லை.
அதை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு கோயில்கள் பல நாடுகளில் எழுப்பப்பட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே, பிரமாண்ட முருகன் சிலையுடன் கூடிய கோவில் இதில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
மத இனம் பார்க்காமல் பலரும் வந்து தரிசிக்கின்றனர் இந்த பத்துமலை முருகனை.

முருகனை போலவே இப்போது ராஜகாளியம்மனும் மலேசியாவை அலங்கரித்து வருகிறாள். தற்போது, மலேசியாவில் முழுவதும் கண்ணாடியால் ஆன ராஜகாளியம்மன் கோவில் , உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலேசியாவின் தெற்கில் உள்ள ஜோகோர் பாரு என்ற இடத்தில, இப்போது புனரமைக்கப்பட்டுள்ள இக் கோவில், மிகவும் பழமையானது. 1922ஆம் வருடம் சிறிய குடிலில், இந்த தெய்வம் அருள்பலித்து வந்தது.
அதன் பின்னர் 1991ல், இந்த கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மீண்டும் சில மாற்றங்களுடன், 1996ல், தரிசனத்துக்காக, மறுபடியும் திறக்கப்பட்டது.

இந்த கோயிலின் தலைமை குருக்கள், ஸ்ரீ சின்னத் தம்பி சிவசாமி. இவர் சில வருடங்களுக்கு முன், பாங்காக் சென்றிருந்த போது, தூரத்தில் ஒரு இடத்தில் வைரக்கல் மின்னுவதை போன்று ஒளிவீசுவதை, பார்த்தார்.
அங்கு சென்று பார்த்தபோது ஒளிவீசிய அந்த இடம் முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்டிருக்கும் ஒரு கோவில் என்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

அப்போது தான் பூஜித்து வரும் ராஜகாளியம்மன் கோவிலையும் இதேபோல் அழகாகவும் நேர்த்தியாகவும் எழில் மிகுந்ததாகவும் மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
இதன்பின் மலேசியா திரும்பி கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்தார்.
நன்கொடைகள் மூலமும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலமும் கிடைத்த பணத்தில் ஐந்து கோடி ரூபாய் செலவில் ராஜகாளியம்மன் கோயில் நேர்த்தியாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்கள் முழுவதும் பல வண்ணங்களில் ஒளிவீசும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தரைப் பகுதியில் ஒளியை பிரதிபலிக்கும் வகையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொசைக் கற்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன
நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய, சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறங்களிலான, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடிகள், இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன

கோயிலில் உள்ள தூண்கள், சுவர், மேற்கூரை ஆகிய அனைத்து பகுதிகளும், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கோயிலில் பொருத்துவதற்காகவே ஒளியை வித்தியாசமாக பிரதிபலிக்கக் கூடிய மின் விளக்குகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கின்றன
இந்த விளக்குகளின் வெளிச்சம் கண்ணாடிகளில் பட்டு பிரதிபலிக்கும் அழகை பார்ப்பதற்கு கோடி கண்கள் வேண்டும். மேலும் கோயில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

சொர்க்கம் போல் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் இந்த கோயிலில் தரிசனம் செய்வதற்காகவும், இதன் அழகை காண்பதற்காகவும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். மேலும் இந்த அழகிய கோயில், மலேசியாவின் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.



http://news.lankasri.com/spiritual/03/178142?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக