தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 பிப்ரவரி, 2018

தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்! அறிந்திடாத பத்து விடயங்கள்


தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில் நுட்பங்களையும் உருவாக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். முத்தையா அவர்களின் பிறந்த நாள் இன்று.
அவரைப் பற்றி யாரும் அறிந்திடாத பத்து விடயங்கள்..
  • இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் 1886ஆம் அண்டு பிறந்தார். இவரது தந்தை ராமலிங்கம், ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவர். 7 வயதில் தந்தையையும், அதற்குப் பிறகு ஒருசில ஆண்டுகளில் தாயையும் இழந்தார்.
  • உறவினர்களின் ஆதரவுடன் கலாசாலையில் பயின்றார். 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயாவுக்கு சென்றார். அங்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. சிறிது காலம் பணியாற்றியவர், பிரபல வணிக நிறுவனத்தில் சேர்ந்தார்.
  • அங்கு 1930 வரை பணிபுரிந்தார். இந்த காலக்கட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவற்றை கற்றார். 1913இல் ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  • தமிழ், ஆங்கில இலக்கியங்கள், கைத்தொழில் நூல்கள், சமய நூல்களைக் கற்றார். ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதினார். அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
  • தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் அடக்குவது சவாலாக இருந்தது. எனவே, பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனி விசைகளில் அமைத்தார். இரண்டு விசைகளை அழுத்திய பிறகே அச்சு நகர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ‘நகரா விசை’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.
  • சிறந்த, எளிய உத்திகள் மூலமாக சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார். அதற்கு ‘ஸ்டாண்டர்டு தட்டச்சு’ என பெயரிட்டார். ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துகள் கொண்ட தமிழ் மொழியை, தட்டச்சு இயந்திரத்துக்குள் அடக்கி, தமிழுக்கென பிரத்யேக தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • விசைப் பலகையை உருவாக்கும் பணியை ஜெர்மன் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். பெரும் எண்ணிக்கையில் இறக்குமதி செய்து விற்பனை செய்தார். தட்டச்சு இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார்.
  • ‘பிஜோ’, ‘ஐடியல்’ ஆகிய போர்ட்டபிள் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கினார். இதை பின்பற்றி பல தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல மொழியினரும் தத்தம் மொழிகளில் தட்டச்சு சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.
  • இரு கைகளின் விரல்களுக்கும் சமமான வேலை இருந்தால்தான் தட்டச்சு செய்வது எளிதாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப எழுத்துகளை சற்று இடம் மாற்றியமைத்தார். ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தட்டச்சு தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார். இவர், சிறந்த சமூக சேவகரும்கூட. குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.
  • தட்டச்சு இயந்திரங்கள் வழக்கொழிந்தாலும், கணினி வடிவில் தமிழ் தட்டச்சு விசைப் பலகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ‘தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை’ என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கை வகுப்புக் கலவரங்கள் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். அந்த நூல் வெளிவருவதற்கு முன்பே காலமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக