தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, January 11, 2017

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும். அதை அடம்பிடிக்கவிடாமல் உடனே கொடுத்துவிடுவது நல்லது. அது தடைப்படும்போதுதான் ஏற்படுகிறது பிரச்னை. எனவே, அதன் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியது அவசியம். பசிக்கும்போது சாப்பிடுங்கள்; தூக்கம் வரும்போது தூங்குங்கள்; விழிப்பு வரும்போது விழித்துக்கொள்ளுங்கள். இது நம் உடலில் இயங்கும் இயற்கை கடிகாரம் சொல்லும் முக்கியமான செய்தி; முறையாகப் பின்பற்றுங்கள். இது, நம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்க வழிவகுக்கும்!
ஆரோக்கியம்
இனி, நல வாழ்வுக்குப் பின்பற்றவேண்டிய முத்தான வழிகள்...
* நாம் பிறந்து வளரும் இடத்துக்கு ஏற்ப நமது உடல் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படும். ஆகவே, ஒருவர் தான் பிறக்கும் இடத்தில், அந்தந்த மண்ணில் விளையும் பொருட்களை அன்றாட உணவாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தின் பாரம்பர்ய உணவுகளான கம்பு, சாமை, சிறுதானியங்கள் ஆகியவற்றை தமிழர்கள் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.
* எப்போதும் புதிதாகத் தயாரித்த, மிதமான சூடுள்ள உணவுகளையே சாப்பிடப் பழகுங்கள். ஃபிரெஷ்ஷான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதுபோன்ற உணவுகள்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் சீரான அளவில் கிடைக்கும். சுரப்பிகளைச் சரியான அளவில் சுரக்க உதவும்.
* மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயைக் கொதிக்கவைத்து, சமையலுக்குப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் அமில மாற்றம் ஏற்பட்டு, தயாரிக்கப்படும் உணவு நச்சுத்தன்மை பெறக்கூடும். குறிப்பாக ஹோட்டல் உணவுகளில் இந்த பிரச்னை அதிகமாக காணப்படும். உணவில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும். உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
* மைதா உணவுப் பொருட்கள், நொறுக்குத்தீனிகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், சூப்பர்மார்கெட்டுகளில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள், டின்னில் அடைத்த உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தவிருங்கள்.
* குளிர்ச்சியான தண்ணீர், கோலா பானங்களை உணவுக்குப் பின்னர், முன்னர், நடுவில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் செரிமானம் தாமதப்படும். உடல்பருமன் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
* சாப்பிட்ட உணவு செரிமானமாகி, மீண்டும் பசி எடுக்கும்போதுதான் அடுத்த வேளை உணவைச் சாப்பிட வேண்டும். இதுதான் உணவியலின் பொன் விதி. இப்படிச் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். போர் அடிக்கிறது என நொறுக்கு தீனிகளை அவ்வப்போது சுவைப்பது தவறான செயல்.
* சாப்பிட்டவுடன் குளிப்பதைத் தவிருங்கள். இதனால் செரிமானத்துக்கு உதவுவதற்கான ரத்த ஒட்டம் வயிற்றுக்குச் செல்லாமல் கை, கால் தசைகளுக்குச் சென்றுவிடும். இதனால் செரிமானம் தாமதப்படும்.
* இரவு படுக்கைக்குச் செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் செரிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கும்போது நீங்க தூங்க சென்றால் தூக்கமும் செரிமானமும் பாதிக்கும்.
* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் அரை டீஸ்பூன் பனங்கற்கண்டு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள பாலை அருந்தலாம். இதனால், நன்கு துக்கம் வரும். மனஅழுத்தம் குறையும். செரிமானம் எளிதாகும்.

No comments:

Post a Comment