தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, August 19, 2016

சிலம்பு காட்டும் விதி வலிமை!


திருமால் வாமணனாக அவதாரம் எடுத்து வந்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டபோது குழந்தை தானே என்ற எண்ணத்தில் நீயே அளந்து எடுத்துக் கொள் என்றான் மகாபலி! மறுகணமே திருமால் மிகப்பெரிய உருவம் எடுத்து விண்ணுலகத்தை ஓரடியாலும் பூமியை இன்னொரு அடியாலும் அளந்து கொண்டு மகாபலி! என் மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என்று கேட்டார்!

வாமணா! கொடுத்ததை இல்லை என்று சொல்ல வைத்து என்னைப் பாவியாக்கி விடாதே! உன் மூன்றாவது அடியை என் தலைமீது வை என்றான் மகாபலி! அப்ப...ோது கூட இறைவனான திருமால் இரக்கம் காட்விலிலை! மகாபலியின் தலைமீது காலை வைத்து பாதாள உலகம் வரை அழுத்தி அவனை கொலை புரிந்தார் திருமால்!
இங்கே தெய்வம் ஒரு தப்பு செய்கின்றது! முதலில் குள்ள உருவத்தோடு சிறுவனாக வந்து நிலம் கேட்டு அது கிடைத்த பின்பு தன் சிறிய காலால் மூன்று அடி நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளாமல் பெரும் உருவம் எடுத்து எல்லாவற்றையும் அளந்து கொண்டு தலையில் கால் வைக்கின்றது! ஒருவனை ஏமாற்றி அழித்து விடுகின்றது!
இந்தக் குற்றத்தைச் செய்த தெய்வத்துக்குத் தண்டனை உண்டா? ஆம் என்றால் அதைத் தருவது யார்? என்ற கேள்வி எழுகின்றது! இந்தக் குற்றத்திற்கான தண்டனை திருமாலுக்கக் கிடைத்தது! அதைக் கொடுத்தது விதி என்றார் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள்!
வாமண அவதார நோக்கம் முடிந்து திருமால் இராமனாக அவதாரம் எடுத்து அரன்மனையிலே மிகவும் நல்லவாக தருமம் தவறாதவனாகத் தான் சீதையுடன் வாழ்ந்தார்! ஆனால் முடி தரித்து நாட்டை ஆளப் போகும் நேரத்தில் ஓரிவிலே ஆட்சி இழந்து காடு செல்ல நேர்ந்தது.
தான் மட்டும் அந்தத் துன்பத்தை அனுபவித்திருந்தால் இராமர் மனம் கவலைப்பட்டிருக்காது! காரணம் அவர் யோகி! தன்னோடு சேர்ந்து ஒரு குற்றமும் செய்யாத மனைவியும் தம்பியும் நடந்த போது இராமர் மிகவும் வருத்தமுற்றார்!
இளங்கோவடிகள் சொன்னார்! இராமா! நீ வாமண அவதாரத்திலே மூன்று அடிகளை ஒழுங்காக அளந்திருந்தால் இராமனாக பிறந்து காட்டிலே கல்லிலும் முள்ளிலும் இத்தனை அடிகளை வைத்து அலையும் நிலை வந்திருக்காது! நீ செய்த தவறுக்காக உன்னைச் சேர்ந்தவர்களையும் அலைய வைத்து விதி தண்டிக்கின்றது பார்த்தாயா? ஈரடியாலே மூன்று உலகத்தையும் முறை நிரம்பாமல் குறையாக அளந்த பாவ வகை முடிய பாதம் சிவக்க அடி எடுத்து வைக்கும் நிலைக்கு தெய்வமாக இருந்தாலும் நீ ஆளாகி விட்டாயே! அறம் எவ்வளவு வலிமையது பார்த்தாயா? என்றார் இளங்கோவடிகள்!
மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
(சிலப்பதிகாரம் - ஆய்ச்சியர் குரவை)
இதைத்தான் திருவள்ளுவர் தீயவை தீய பயத்தலால் தீயவை தீயிலும் அஞ்சப்படும் என்று குறளில் சொன்ன போது அதற்கு உரை எழுதிய பரிமேலழகர் பிறிதொரு காலத்தும் பிறிதொரு தேசத்தும் மட்டுமல்ல பிறிதொரு தேகத்திலும் வந்து பற்றிக் கொள்ளும் என்று குறிப்பிட்டார்!
வாமண தேகம் செய்த தப்புக்கு விதி இராம தேகம் செய்த புண்ணியங்களை எல்லாம் சிதற அடித்துவிட்டுப் புகுந்து கடவுளுக்கே தண்டனை கொடுத்தது என்றால் நாம் எந்த மூலைக்கு என்பதைத்தான் மனிதர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!

இரா.சம்பந்தன்

No comments:

Post a Comment